நீலகிரி மாவட்டம், குயில்ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி வைலட். இவர்களது இளைய மகள் அருள்மொழி மற்றும் மூத்த மகள் கவிதா (24).
கவிதா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கல்லூரி விடுமுறைக்காக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்படவே பாலு, குன்னூரியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதாவுக்கு மருந்து கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்த கவிதா மருந்தினை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே உடல் முழுவதும் அழற்சி ஏற்பட்டு, கை, கால்கள் கருப்பு நிறத்தில் மாறியுள்ளது. மீண்டும், அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் அழற்சி அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கவிதா, கோவையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் வியாழனன்று உடல் நிலை மிகவும் மோசமடைந்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, அவரது பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவலர்கள் குன்னூர் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.