கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் டிசம்பர் இறுதிக்குள் தற்போது நிலவும் பண பிரச்சனை தீராவிட்டால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிறு அனுப்பும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.
கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தை வெள்ளியன்று (இன்று) மாலை வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொது மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருப்பதாக குற்றம்சாட்டினர்.
பெரு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட 7 லட்சம் கோடி பணம் வாராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய வங்கிகளை காப்பாற்றவே மத்திய அரசு இந்த நடவடிக்கையினை எடுத்து இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் டிசம்பர் இறுதிக்குள் சரியாகிவிடும் என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாகவும், பணப்பிரச்சனை டிசம்பர் இறுதிக்குள் தீரவில்லை என்றால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிற்றை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் தமிழக பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் சமரசப் படுத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.