சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று (நவ.,19) காலை 7 மணிக்கு துவங்கியது.
தமிழகத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்; புதுச்சேரியில், நெல்லித்தோப்பு சட்ட சபை தொகுதிகளுக்கு, இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது. மாலை, 5:00 மணிக்கு மேல், வாக்காளர்கள் நின்றால், அவர்களுக்கு டோக்கன் வழங்கி, ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் 22ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.
உடனுக்குடன் அறியலாம்:
ஓட்டுப்பதிவு சதவீதத்தை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிய, புது வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களை, மொபைல் போனில் அழைத்தால், அவர்கள் ஓட்டுப்பதிவு சதவீதத்தை, மொபைல் போனிலேயே பதிவு செய்து அனுப்புவர். அதற்கான, புதிய சாப்ட்வேர், இந்தத் தேர்தலில், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எனவே, ஓட்டுப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் அறியலாம். அவை, தேர்தல் கமிஷன் இணையதளத்திலும் வெளியிடப்படும்.
பலத்த பாதுகாப்பு:
தேர்தல் அமைதியாக நடைபெற, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.