பீஜிங்: சீனா விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்தில், ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 2 விஞ்ஞானிகள், ஒரு மாத பயணத்துக்குப் பின் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
நிரந்தர விண்வெளி ஆய்வு மையம்:
சீனா வரும் 2022ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக விண்வெளிக்கு சென்று திரும்பும் வகையிலான விண்கலத்தை அனுப்பி வருகிறது. இதற்காக இதுவரை 5 முறை விண்வெளிக்கு விஞ்ஞானிகளை அனுப்பியுள்ளது.
விண்வெளி பயணம்:
ஆறாவது முறையாக கடந்த அக்., 17ம் தேதி 'செனஷோவ் 11' என்ற விண்கலம் மூலம் ஜிங் ஹெய்பிங், 50, ஷென் டங், 38, என்ற இரண்டு விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்பியது. இதில் ஜிங் ஹெய்பிங் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு சென்ற அனுபவம் உள்ளவர். ஷென் பிங் முதல்முறையாக சென்றிருந்தார். இவர்கள் விண்வெளிக்கு சென்றவுடன் ஏற்கனவே 2 விஞ்ஞானிகளுடன் அனுப்பப்பட்டிருந்த 'டியாங்காங் 2'விண்கலத்துடன் இணைந்து கொண்டனர்.
பூமி திரும்பினர்:
பின் இருவரும் ஒரு மாதம் அங்கு தங்கியிருந்து திட்டமிடப்பட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். பணி முடிந்து நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். நீண்டகாலம் விண்வெளியில் தங்கிய சீன வீரர்கள் என்ற பெருமையையும் பெற்றனர். இதற்கு முந்தைய ஐந்து விண்வெளி பயணங்களும் குறுகிய கால ஆய்வுப் பணியாக அமைந்திருந்தன.
2022ல் முடிவடையும்:
பூமியில் இருந்து சுமார் 393 கி.மீ., உயரத்தில் சீனா அமைத்து வரும் விண்வெளி ஆய்வு மையத்தின் மாதிரி 2018ல் முடிவு பெறும். முழுமையான பணி 2022ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.