தமிழக அரசு வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஹரிஹரனுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன், கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள இயற்கை இடர்பாடுகளுக்கான முன்னேற்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள், நிலுவையிலுள்ள மனுக்கள், அம்மா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவ மழையினைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், மழையளவு ஆகியன குறித்து கேட்டறிந்தார்.
மேலும், வருவாய் வசூல் சட்டம், நிலவரி, நகர்ப்புற நிலவரி ஆகியவற்றின் கீழ் அரசுக்கு வர வேண்டிய நிலுவைத்தொகைகள் குறித்து ஆய்வு செய்தார். நிலுவைத்தொகைகளை விரைந்து வசூல் செய்யவும் அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பட்டா மாறுதல், ஆன்லைன் சான்றிதழ்கள் ஆகிய மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி மற்றும் சின்னச்சாமி மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.