தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியின் சார்பில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தூய்மைப் பணியில் ஈடுபட அழைப்பு விடப்பட்டது.

அதன்படி, இன்று கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட இரயில் நிலையம் அருகில் கோவை மாநகாட்சியும், தூய்மை பாரத இயக்கமும் இணைந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து பேருந்து நிலையம், கடைகள், ஆட்டோ நிறுத்தம் ஆகிய பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர்.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றி, அப்பகுதி கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோரிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இப்பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
.jpg)
உடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.