மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் தடை செய்தது காரணமாக பொதுமக்களும் வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி இருப்பதாக கூறி மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் ஏ.டி.எம் இயந்திரம் முன்பாக மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கடந்த 8ம் தேதி 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகளை முடக்கியதால் பொது மக்களும், தொழில் முனைவோரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எஸ்.பி.ஐ வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் ஓன்று கூடிய காங்கிரஸ் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஓன்று கூடினர். அங்கிருந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் ஊர்வலமாக சென்று எஸ்.பி.ஐ வங்கியை நோக்கி செல்ல முயன்றனர். போலிசார் அனுமதி மறுக்கவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கருப்பு பணத்தை ஓழிக்க மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்க தக்கது என்றாலும் சரியான திட்டமிடல் இல்லாததால் பொது மக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். தற்போது நிலவும் பண தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து எஸ்.பி.ஐ தலைமை அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 90 பேரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
