நவம்பர் 8-ம் தேதி, இந்திய மூலதனத்தை தலைகீழாகப்புரட்டிப் போடும் அறிவிப்பாக ரூ.500, ரூ,1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பொது மக்கள் இன்றுவரை பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். தொலைக்காட்சிகளின் நேரலையில் பிரதமர் மோடி, (நவம்பர் 8-ம் தேதி இரவு முதல்) தற்போது புழக்கத்தில் உள்ள 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் அதனை டிசம்பர் 31-ம் தேதிவரை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி அந்த அறிவிப்பில் சொல்லி இருந்தார்.
இதற்கு பல கட்சியினர் மற்றும் தொழில் அதிபர்கள் ஆதரவும் தெரிவித்தும், பலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஆனால், முன் ஏற்பாடுகள் எதையும் முறையாகச் செய்யாமல், வெளியிட்ட அறிவிப்பால், நடுத்தர மக்களுக்கு சிக்கல்கள் மேலும் மேலும் பெரிதாக்கிக்கொண்டே போகிறது. புதிய 2 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் வாங்குவது பெரும் போராட்டமாக இருக்கிறது. வாங்கிய பிறகு அதை மாற்றிச் செலவு செய்து, சில்லறை வாங்குவது அதைவிடப் பெரிய போராட்டமாக இருக்கிறது. புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் நாடு முழுவதும் இன்னும் பரலவலாகக் கொண்டுபோய்ச் சேர்க்கப்படவில்லை. அது, தமிழகத்தின் எல்லைக் கோட்டைக்கூட இன்னும் தொட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் ஒருமுறை பணம் எடுத்தவர்களின் கையில் மை வைக்கப்படும், ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் எடுக்க முடியும் என்று புதிது புதிதாக அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால், ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த மக்களை ஆத்திரத்தின் எல்லைக்குள் தள்ளிவிட்டுள்ளது.
இது குறித்து, கோவை மக்களில் வியாபாரத்தின் நிலையைப் பற்றி நமது நிருபரிடம் கூறியது:-
ஆர்.எஸ் புரம், பூமார்க்கெட் வியாபாரி வசந்தி பேசுகையில்;
நாங்கள் மூன்று தலைமுறையாக இங்கு பூக்கள் வியாபாரம் செய்து வருகிறோம். முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூக்கள் வியாபாரம் மிகுதியாக இருக்கும். மற்ற நாட்களில் 500, 1000 போன்ற குறைந்த வியாபாரம் கிடைக்கும். தற்போது ரூ.500, ரூ,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்த நிலையில் பூக்கள் வியாபாரம் மந்தமாகி உள்ளது. இதனால், வாங்கிய பூக்களை விற்றால் தான் பணம் கிடைக்கும் பூக்கள் விற்காத நிலையில் வாடிய பூக்களை குப்பையில் கொட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

போத்தனூர் பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் உம்மர் பேசுகையில்;
போத்தனூர் ஆட்டோ ஸ்டாண்டில் 5 ஆண்டுகளாக சரக்கு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறேன். கட்டிடம் மற்றும் இதர பணிகள் மூலமாக சரக்கு ஆட்டோவிற்கு வேலைகள் வரும் இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் குடும்பங்கள் நடத்தி வருகிறேன். இந்நிலையில், தற்போது ரூ.500,1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், எங்களை போன்ற சிறு குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு ஆட்டோவில் ஒரு நாளைக்கு ரூ.1000 கிடைத்தால், அதில் ஆட்டோவிற்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.300 டீசல் போடப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளால், சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டும், இதனால் சரக்கு ஆட்டோவிற்கு வாடகை வாராமலும் இருக்கிறது.

டவுன்ஹால் புத்தகக்கடை உரிமையாளர் சஹாபுதீன் பேசுகையில்;
7 ஆண்டுகளாக புத்தக வியாபாரம் செய்து வருகிறேன். இப்பகுதியில், தற்போது 23 புத்தகக்கடைகள் உள்ளது. இங்கு புத்தக வியாபாரம் பள்ளி, கல்லூரிகள் துவங்கும்முன் வியாபாரம் இருக்கும். மற்ற நாட்களில் வியாபாரம் மந்தமாக காணப்படும். கல்லூரிகளில் ஆறு மதத்திற்கு ஒருமுறை பருவத் தேர்வு நடைபெறும் போது புத்தக வியாபாரம் நடைபெறும். தற்போது மத்திய அரசின் இந்த அறிவிப்பால், புத்தகம் வாங்க வருபவர்கள் ரூ.2000 நோட்டுகளை கொண்டுவருவதால், சில்லறை தட்டுப்பாட்டால் வியாபாரம் வெகுவாக குறைத்துள்ளது. பெரிய வர்த்தக கடைகளில் இயந்திரத்தின் மூலம் கார்டுகளில் பணம் பரிமாற்றப்படுகிறது. ஆனால், சிறு குறு வியாபாரிகள் இந்த வசதி இல்லாததால், வாடிக்கையாளர்களை ஏ.டி.எம் மையத்திற்கு அழைத்து சென்று வியாபாரம் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

ஏ.டி.எம்.-ல் பணம் உள்ளதா?
ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் இந்த நிலையில், நேரத்தை வீணாக்காமல் இருக்க ஒரு புதிய வழி கிடைத்துள்ளது. www.cashnocash.com என்ற இந்த இணையதள முகவரியை உபயோகித்து, உங்கள் அருகில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் உள்ளதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒரு குறிப்பிட்ட வங்கி ஏ.டி.எம்.களில் பணம் தீர்ந்து போகும் நேரத்தில் இந்த இணையதள முகவரிக்குள் சென்று, பிறருக்கு பயனளிக்கும் வகையில் தகவல்களை தெரிவிக்கலாம்.
இதே போல http://m.me/ATMChatBot இந்த முகவரியை உபயோகித்து பேஸ்-புக் மெசெஞ்சர் உதவியின் படி நீங்கள் இருக்கு இடத்தில் இருந்தே உங்கள் அருகாமையில் உள்ள ஏ.டி.எம். குறித்த விவரங்களை குறுஞ்செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். இதுபோன்ற செயலிகள் மற்றும் இணையதளங்களை உபயோகிப்பதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளமுடியும்.