கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 16-வது வார்டு மருதபுரம், நஞ்சப்பன் விதி ஆகிய பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை ஊற்றுவதை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி புதனன்று (இன்று) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் தனி நபர் கழிப்பறை கட்டும் பணிகளையும், மருதபுரம் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதையும் ப.காந்திமதி பார்வையிட்டார்.

பின், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசு ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வினை ப.காந்திமதி ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வுகளின் போது நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.