கடந்த 2012-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த ஜேம்ஸ் இம்மானுவேல், ஈரோடு பள்ளப்பாளையம் பகுதியில் தங்கி கல்லூரியில் பயின்று வந்தார். அடிக்கடி அவர் பல்வேறு முகவரிகளுக்கு கூரியர் அனுப்பி வந்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், ஜேம்ஸ் கூரியர் மூலம் ஹெராயின் எனும் போதை பொருளை விற்பனை செய்து வந்ததும், அவரது வீட்டில் 200 கிலோ கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, ஜேம்ஸை கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர்கள், அவர் மீது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைபொருள் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்காக ஜேம்ஸ் அடிக்கடி கோவைக்கு வந்து சென்ற நிலையில் வழக்கை விரைந்து முடிக்குமாறு கூறி அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், புதனன்று (இன்று) வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜேம்ஸ், நீதிமன்ற வளாகத்தில் வழக்கை விரைந்து முடிக்குமாறு கோரி அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவல் துறையினர் மற்றும் வழக்கறிஞர்களுடன் சட்டையை கழற்றிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ரேணுகா தாமஸ், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஜேம்ஸ் தொடர்ந்து இது போன்று பிரச்சனையில் ஈடுபட்டு வருவதோடு கடந்த 2 வாய்தாக்களில் தன்னை தாக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, வெளிநாட்டவரான ஜேம்ஸிற்கு உரிய நீதி பெற்றுத்தரும் நோக்கில் அவருக்காக ஆஜராக உள்ளதாக மனித உரிமை வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் சிவசாமி தமிழன் அறிவித்துள்ளார்.
நைஜீரியர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.