கோவை மாநகரில் வாகன விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் பலியாவோர் எண்ணிகையை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அதன்படி, இன்று பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தனியார் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சி நடைபெற்றது.


கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துணை ஆணையர், சரவணன், வாகனம் ஓட்டும்போதும், விபத்து நடக்கும்போதும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஓட்டுனர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் மருத்துவ குழுவினர், மனித உருவ மாதிரிகளை கொண்டு முதலுதவி மேற்கொள்ளும் வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து அதிகாரி (கிழக்கு) அய்யாசாமி, உதவி கமிஷனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி தங்களுக்கு உதவிகரமாக இருந்ததாகவும், இதன் மூலம் விபத்து ஏற்படும் போது உயிர்களை காப்பாற்றுவோம் என்றும் ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.
