கோவை-பெங்களூர் இடையிலான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவக்கப்படும் என சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா தெரிவித்துள்ளார்.

கோவை இரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா கூறியதாவது:-
கோவை ரயில் நிலையத்தில் இட நெருக்கடியை தவிர்க்க பல அடுக்கு நான்கு மற்றும் இரு சக்கர வாகன நிறுத்த வசதிகள் 2 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் மூன்று அல்லது நான்கு மாதத்தில் துவக்கப்படும். கோவை- பெங்களூர் இடையிலான இரவு நேர இரயில் சேவை குறித்து இரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும்.
மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்த கோவை- பெங்களூர் இடையேயான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவங்க திட்டப்பட்டுள்ளது. மேலும், போத்தனூர்- பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பிரச்சனையில் தென்னக இரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது. கோவை இரயில் நிலையத்தில் குறுக்கலாக உள்ள முதலாவது நடைமேடை அகலப்படுத்தப்படும். சுரங்க நடைபாதை, லிப்ட், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்'' என ஹரி சங்கர் வெர்மா தெரிவித்தார்.