500 மற்றும் 1000 ரூபாய் பணபரிவர்த்தனையில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட எஸ்.பி.ஐ மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பிற்கான செயல் திட்ட விழாவில் எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ அவினாசிலிங்கம் டிரஸ்டின் பயிற்சி மையத்திற்காக 23 லட்சத்து 59 ஆயிரத்து 831 ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும், SBI digital village திட்டத்தில் கோவை மண்டலத்தில் சிக்கராஜபுரம், வரதராஜபுரம், கரியமாணிக்கம், சாத்தான்குளம் ஆகிய 4 கிராமங்கள் சேர்க்கப்பட்டு அந்த கிராமங்களில் ஒய்-பை வசதி மற்றும் அனைத்து சேவைகளும் கிடைக்கும் இ கார்னர் எனப்படும் திட்டம் ஆகியவற்றை அருந்ததி துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில், நாடு முழுவதும் 60 சதவிகிதம் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 5 நாட்களில் மீதமுள்ள ஏ.டி.எம்-கள் சீரமைக்கப்பட்டு விடும் என தெரிவித்தார்.
500 ரூபாய் நோட்டுகள் எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு வந்துள்ளது எனவும், சென்னையில் இன்று முதல் 500 ரூபாய் ஏ.டி.எம்-களில் கிடைக்கும் எனவும் கோவையில் விரைவில் 500 ரூபாய் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி விகிதம் குறையவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்த அவர், டிஜிட்டல் பண பரிவர்த்தனை 300 சதவிகிதம் எண்ணிக்கை அடிப்படையிலும், 200 சதவிகிதம் ரூபாய் மதிப்பு அடிப்படையிலும் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், 841 நடமாடும் ஏ.டி.எம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பண விநியோகம் செய்யப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் 3600 பி.ஓ.எஸ் எனப்படும் ஸ்வைப்பிங் மிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விரைவில் 500 ரூபாய் நோட்டுக்கள் முழுமையாக புழக்கத்தில் வரும் எனவும், அதன் பின்னர் பண தட்டுப்பாடு விரைவில் சரியாகும் என தெரிவித்த அவர், மக்கள் அச்சத்தில் 100 ரூபாய் மற்றும் குறைவான மதிப்புடைய நோட்டுகள் புழக்கத்தில் விடாமல் கைகளில் வைத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
பணபரிவர்த்தனை தொடர்பாக வங்கி அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இது வரை புகார் எதுவும் வரவில்லை. வங்கி அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வங்கியில் வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ வங்கிகளை இணைப்பது தொடர்பாக மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.