மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் தூய்மை பாரத இயக்கம் மூலம் 127 ஊராட்சிகளில் 10 ஆயிரத்து 763 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டு திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிராமங்கள் மற்றும் மழைவாழ் கிராமங்களில் தூய்மை பாரத இயக்கம் சார்பில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டிடப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார்
. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பொதுசுகாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்ததுடன் மத்திய அரசுத் திட்டத்தின் கீழும் பொது சுகாதாரத்தை பாதுகாத்திட பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டங்களை வெளியிட்டார்.
அதனடிப்படையில் ஊராட்சிப் பகுதிகளிலிருந்து நகர்பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தனிநபர் கழிப்பறை கட்டிடத்தையே பயன்படுதிட வேண்டும். திறந்த வெளி மலம் கழித்தல் முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊரட்சிப்பகுதியில் தனிநபர் கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு உடனடியாக கழிப்பறை கட்டுவதற்கு அரசே ரூ.12 ஆயிரத்து 500 நிதியுதவி வழங்கி கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு கழிப்பறைக் கட்டிடங்கள் கட்டி பயன்படுத்துவதன் மூலம் கிராமப்பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பும் கிடைக்கின்றது. மேலும், கிராமப்பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிக்கச் செல்லும் போது விலங்குகள் மற்றும் விஷப்பூச்சிகள் தாக்குதலிலிருந்து முழுமையாக பாதுகாத்துக்கொள்ள தனிநபர் கழிப்பறைக் கட்டிடம் மிக முக்கியமானதாகும்.
கோவை மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் அமைந்துள்ள 228 ஊராட்சிகளில் 2015- 16 மற்றும் 2016- 17ஆம் ஆண்டுகளில் 127 ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 101 ஊராட்சிகள் மார்ச் 2017-க்குள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளது. 2016-17 ஆம் ஆண்டு தூய்மை பாரத இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 56 ஆயிரத்து 615 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு தற்போது 10 ஆயிரத்து 763 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் செலகரச்சல், வாரப்பட்டி, வடவள்ளி ஆகிய ஊராட்சிகளிலும், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதவராயபுரம் ஊராட்சியிலும் கட்டப்பட்டுள்ள தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டிடங்களை பார்வையிட்டதுடன் ஊராட்சி அளவில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பாராட்டுக்கள் தெரிவித்து தொடர்ந்து ஊராட்சிகளில் எல்லோரும் தனிநபர் இல்லக் கழிப்பறைகளையே பயன்படுத்திடும் வகையில் உங்கள் பணி இருந்திட வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், சாடிவயல் மழைவாழ் மக்கள் கிராமங்களில் பழங்குடியின மக்கள் தங்களின் இயற்கை உபாதைகளுக்கு காட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் போது, வனவிலங்குகளால் தாக்கப்படுவது தனிநபர் இல்லக்கழிப்பறைகள் மூலம் தவிர்க்க முடியும்.
எனவே, மாவட்டத்திலுள்ள அனைவரையும், தனிநபர் கழிப்பறை கட்டிடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும், விழிப்புணர்வு பணிகiளை மேற்கொள்ளும்படியும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஊராட்சி செயலர் பத்மாவதி, உதவி செயற்பொறியாளர் சுப்பையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், ஜெயஸ்ரீ, விவேகானந்தன், ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.