500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றமுடியாததால் விரக்தி அடைந்த தனியார் வங்கி காவலாளி குடிபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கணபதி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பணத்தை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வந்த ஐயப்பன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. குழந்தைகளுக்கு வழக்கமாக வாங்கும் அரிசியை வாங்க முடியாமல் ரேசன் அரிசி வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் அவர் கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஐயப்பன் அங்கிருந்த அரசு கார் ஒன்றில் லேசாக மோதினார். இதையடுத்து அவரது இருசக்கர வாகன சாவியை அங்கிருந்த ஓட்டுனர் ஒருவர் எடுத்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த ஐயப்பன் அரசு அதிகாரிகளையும் அரசையும் விமர்சித்து கூச்சலிட்டார். தொடர்ந்து ஏக வசனத்தில் அரசு அதிகாரிகளை விமர்சித்த அவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினரோடும் ஐயப்பன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை விசாரணைக்காக கோவை பந்தயசாலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.