கோவை: ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலைக் கல்லூரியில் ரேடியோ சிட்டியின் "தெரிந்த கோவை தெரியாத விஷயம்" ஆடியோ புக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவை பற்றிய பல்வேறு வரலாற்று தகவல்கள் கூறும் வகையில் இருந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தினமலர் மூத்த பத்திரிக்கையாளர் செல்வகுமார் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கோவை நகரம் வரலாற்றை கூறும் சிறப்பு நகரமாகவும், கோவை நகரை பற்றி இந்த ஆடியோ புக் வெளியிடுவது பெருமைக்குரிய ஒன்றாகும். என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், 22 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தேன். மேற்கு தொடர்ச்சி மலை, ஆறுகள் போன்ற இயற்கை வளங்கள் என்னை கவர்ந்தது. இயற்கை வளங்களை பற்றி கட்டுரை எழுத தொடங்கினேன். கோவை நகரில் உள்ள தன்னார்வ அமைப்புகள் மூலமாக கவுசிகா நதியின் தொடர்கதை எழுத தொடங்கினேன். குருடிமலையில் தொடங்கும் இந்நதி நொய்யல் ஆற்றின் துணை நதியாகும். இதனை தெரிந்து கொண்டு எனது தொடர்கதையின் மூலம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி நாகராஜ் பாராளுமன்றத்தில் பேசினார். இதுவே எனக்கு கிடைத்த வெற்றி என்றார்.

மேலும், இதுபோன்ற நாம் அறியாமல் இருக்கும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய தேடல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கவும், அடுத்த சந்ததியினருக்கு இதனை கொண்டு சேர்க்கவும் பாடுபட வேண்டும் எனக் கூறினார்.

பின்னர், விழாவில் "தெரிந்த கோவை தெரியாத விஷயம்" ஆடியோ புத்தக தகடினை ரேடியோ சிட்டி சார்பில் வெளியிட, அதனை தினமலர் மூத்த பத்திரிக்கையாளர் செல்வகுமார் பெற்றுக் கொண்டார். அதன்பின், ரேடியோ சிட்டியின் 'பிளானட்ரேடியோ.காம்' என்ற இணைய தளத்தினை ரத்தினம் கல்லூரியின் தலைவர் மதன் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், பழங்கால ரேடியோவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. மாணவர்கள் இதனை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில், வரலாற்று ஆராய்ச்சியாளர் இளங்கோவன், ரத்தினம் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி மாணிக்கம், வரலாற்று ஆய்வாளர் ராஜேஷ் கோவிந்தராஜ், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
