கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்களுடனான வருடாந்தர கடன் திட்ட புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், நபார்டு வங்கியின் 2017-18ம் ஆண்டிற்கான கடன்திட்ட அறிக்கையினை வெளியிட்டு தெரிவித்ததாவது:-
நபார்டு வங்கியானது விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த அதிக அளவில் பணப்பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தி பல்வேறு கடன்திட்டங்களை வழங்கி வருகின்றது. இதன் மூலம் வேளாண் விளைச்சலை அதிகப்படுத்துதல், மற்றும் பண்ணைசாரா தொழில்களில் அதிக அளவிலான வேலைவாய்ப்பினை ஏற்படுத்துதல் ஆகிய அணுகுமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி வருகின்றது.
இதுவரையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 1500 பண்ணை சார்ந்த கூட்டுப்பொறுப்புகளை உருவாக்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட அறிக்கை தொலைநோக்கு பார்வையுடன் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குதல் என்ற கொள்கையுடன், பல அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2017- 2018-ஆம் வருடத்திற்கான தீட்டப்பட்ட மொத்த கடன் திட்ட தொகையான ரூ.16892.31 கோடியில் 38 சதவிகிதம் வேளாண்மைத் துறைக்கும், 46 சதவிகிதம் சிறு குறு தொழில்களுக்கும், கல்விக்கடன், வீட்டுக்கடன், ஏற்றுமதிக்கடன் முதலியவற்றிற்கு 16 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நபார்டு வங்கியின் உதவியின் மூலம் 4 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தோற்றுவிக்கப்படவுள்ளன. இவற்றினை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கனரா வங்கி பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணன், துணை மேலாளர் பரமசிவம், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் அருள்செல்வன், ஆர்பிஐ மேலாளர் வி.சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அ.கனகராஜ் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.