‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கூற்றின்படி இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் சமமானவர்கள் தான். இதைபொருத்து, ஒவ்வொரு உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதும், அனைவரையும் சமமாக பாவிப்பதும், கருணை காட்டுவதும் மனித குலத்திற்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய குணாதிசயங்களுள் ஒன்று.ஆனால், நெருக்கடி மிகுந்த வாழ்கை சூழ்நிலைகளால் மனிதம் என்பது மறக்கப்பட்டு வருகிறது.
மக்கள் நெருக்கம் மிகுந்த கோவை மாநகர சாலைகளில் இருசக்கர வாகனம் ஒன்றை ஓட்டிசெல்வதே சிரமம். இந்த நிலையில், ஒரு ஆம்புலன்சை வேகமாகவும், யாரையும் சேதபடுத்தாமல் செலுத்துவது எவ்வளவு கடினமான காரியம் என்பது பலருக்கு தெரிந்திருக்க கூடும். இப்படிப்பட்ட கடினமான செயலை பொருட்படுத்தாது, உயிரை காப்பாற்ற கூச்சலிட்டு வரும் ஆம்புலன்சை முந்திக்கொண்டு செல்வது, வழிவிடுவதில் மெத்தனம் காட்டுவது போன்ற பழக்கங்கள் நம் ஊர் மக்களிடம் அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனரான சுந்தர் கூறியதாவது:-

நான் (108) இலவச ஆம்புலன்சின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறேன். கோவையில் மட்டும் 36 அரசு (108) ஆம்புலன்சுகள் உள்ளன. சிங்காநல்லூர், சிவானந்தா காலனி,துடியலூர்,சூலூர், பீளமேடு, மத்திய தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். அவசர அழைப்புகளின் போது அருகில் இருக்கும் வண்டி சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியோரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும். சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரத்தில் 10 கி.மீ தூரத்தை அதிகபட்சமாக 7 நிமிடங்களில் சென்றடைவோம். ஆனால், இன்றைய போக்குவரத்து நெரிசல் காரணங்களால் குறைந்தது 20 நிமிடம் ஆகிறது. நேரம் அதிகரிக்கும் போது விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
பின் தொடர வேண்டாம்
ஓலி எழுப்பிக்கொண்டு வேகமாக செல்லும் ஆம்புலன்சு வண்டியை பலர் இருசக்கர வாகனங்களில் பின் தொடர்கின்றனர். போக்குவரத்து சிக்னல்களை தவிர்ப்பதற்காக அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். அதிவேகமாக செல்லும்ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதால் , திடீரென பிரேக் பிடிக்கும் போது பின்னே வருபவர்கள் எங்கள் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இது தொடர்கதையாகி வருகிறது. தயவு செய்து ஆம்புலன்சுகளை யாரும் பின் தொடர வேண்டாம். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாது உயிருக்கு போராடும் ஒருவருக்கும் சிக்கல் உண்டாகிறது.
வழிவிடுங்க ப்ளீஸ்
பல கார்களில் ஏ.சி.யை. செயல்படுத்தி, கார் கண்ணாடிகளை அடைத்துவிடுகின்றனர். அதோடு சப்தமாக பாடலையும் பாட விடுகின்றனர். இதனால், ஆம்புலன்சின் சத்தம் அவர்களுக்கு கேட்பதில்லை. வழி விடாமால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றனர். இன்னும் சிலர் ஆம்புலன்சை பார்த்தும் வழிவிட தாமதப்படுத்துகின்றனர். மனிதாபிமானம் இன்றி இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பாலான. பெண்கள் ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்டு பதட்டமடைகிறார்கள். பலர் அவ்வப்போது கீழே விழுந்துவிடுகின்றனர். பின்னர் அவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியுள்ளது. ஆம்புலன்சில் வரும் ஒலி-யை (சைரன்) கேட்டு யாரும் பயப்பட வேண்டாம். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மிகவும் பெரும்பாலும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பார். உங்கள் பின்னால் ஆம்புலன்ஸ் வரும்போது சாலையின் ஒரு ஓரமாக உங்கள் வாகனத்தை செலுத்துங்கள். அதுவே நீங்கள் ஒரு உயிருக்கு செய்யும் நன்மை.
தனிவழி
முக்கிய சாலைகள் வழியாக ஆம்புலன்சுகள் செல்லும் போது போக்குவரத்துக்கு சிக்னல்களில் சிக்கிக் கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இதனால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல சிக்னல் பகுதியில் இடதுபுற சாலை ஒதுக்கப்பட வேண்டும். இதற்கு போலீசார் உதவி செய்ய வேண்டும்.
சிக்னல்களில் இருக்கும் போக்குவரத்து போலீசார் சிலர் ஆம்புலன்ஸ் வருவதை பார்த்த போதும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தாமல் இருக்கின்றனர். அவ்வாறாக செயல்படாமல், வண்டி வருவது தெரிந்த உடனேயே, சிக்னல்களில், முன்னே நிற்கும் வாகனங்களை செல்ல அறிவுரைப்பது மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் கூறியதாவது:-
கோவை மாநகரை மருத்துவ நகரம் என்று அழைக்கும் அளவிற்கு இங்கு மருத்துவமனைகள் உள்ளன. அதே போல் இங்கு சாலை வசதிகளும் குறைவு. ஆம்புலன்சுகள் செல்வதற்கு பிரத்யேகமான சலையை தற்போது ஒதுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. கோவை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்படும் போது இது குறித்து பரிந்துரை செய்கிறோம்.
போலியான ‘சைரன்’
ஆம்புலன்சுகள் எப்போதும் ‘சைரன்’ ஒலித்தவரே செல்கின்றன. ஆனால் பல நேரங்களில் ஆம்புலன்சுக்குள் நோயாளிகள் இருப்பது இல்லை. ஒரு சிலர் செய்யும் இது போன்ற தவறுகளால் பலருக்கும் கெடுதல் ஏற்படுகிறது. எனவே, அந்த ஓட்டுனர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
ஆம்புலன்சுகள் வரும்போது போக்குவரத்து சிக்னல்களில் இருக்கும் போலீசார் உடனடியாக ஆம்புலன்ஸ் செல்ல ஏதுவாக வழி அமைத்துக் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த சிக்னலுக்கு தகவல் தெரிவித்து நெரிசலை கட்டுப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுவது ஒரு பிரச்சனையா என்று நம்மில் பலரும் நினைக்கலாம். ஆனால், நாம் வழி கொடுப்பது ஓர் உயிர் வாழ்வதற்கு என்ற எண்ணம் அனைவரிடத்திலும் தோன்ற வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.