கோவையில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் சுபாஷ் (19). இவர் கோவையை அடுத்த கணியூரில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த சுபாஷ், சக ஊழியர்கள் நான்கு பேருடன் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த சக ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட சுபாஷ் மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மேலும், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்றவர்கள் வீடுதிரும்பிய போது, சுபாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் சுபாஷின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, சுபாஷ் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதில், காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சுபாஷ் எழுதியுள்ளார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.