கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று (இன்று) விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனுக்களாக வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி மனு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுயதாவது:-
கோவை மாவட்டத்தில் சராசரி மழை அளவாக 187.5 மி.மீ உள்ளது. நவம்பர் 2016 மாதம் வரை 820.6 மில்லி மீட்டர் வரப்பெற்றுள்ளது. இதில், ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வட்டாரங்களில் அதிக மழை பொழிவு பெறப்பட்டுள்ளது.
அணைகளின் நீர் மட்டம் சோலையார் அணையில் 34.95 அடியும், ஆழியார் அணையில் 69.1 அடியும், பரம்பிக்குளம் அணையில் 23.78 அடியும் நீர் இருப்பு உள்ளது. பயிர் சாகுபடி பரப்பு இதுவரை 48566 ஹெக்டேரில் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் பரப்பளவு 1576 ஹெக்டர் ஆகும். இதில் சோளம் 12846 ஹெக்டேர், மக்காச்சோளம் 1664 ஹெக்டேர், பயிறு வகைகள் 3869 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 4080 ஹெக்டேர், மிளகாய், கத்தரி, வெங்காயம், தக்காளி ஆகிய காய்கறி பயிர்கள் 8756 ஹெக்டேர் அடங்கும்.
விவசாயிகளுக்கு விதை விநியோகம் செய்ய விதை இருப்பு நிலவரமானது நிலக்கடலை பாசிப்பயறு, துவரை, உளுந்து ஆகியவை 84360 டன்னும், மக்காச்சோளம், குதிரைவாலி, திணை உள்ளிட்டவை 1287.199 டன்னும் அரசு மற்றும் தனியார் விதை கிடங்குகளில் இருப்பு உள்ளது. இவற்றினை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.
மாவட்டத்தில் உரம் இருப்பு 7626 மெட்ரிக் டன் உள்ளது. யூரியா 2705 மெட்ரிக் டன், டிஏபி 1766 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1623 டன்னும் உள்ளது.
விவசாயிகளுக்கு இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி மூலம் 3646.25 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது'' என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் சு.ராமசுப்ரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிறிஸ்துராஜ், வேளாண் இணை இயக்குநர் சந்திரசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்ராஜ்சாமுவேல், வருவாய் கோட்டாட்சியர் எஸ்.மதுராந்தகி உள்ளிட்டு அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.