தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி, பூலுவப்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையினை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்தார்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி, பூலுவப்பட்டி பகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதிய திட்டப்பணிகளுக்கான பூமிபூஜையினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாதம்பட்டி பகுதியில் பொதுமக்களின் தேவையினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான திட்டப்பணியினையும், பூலுவப்பட்டி பேரூராட்சி வெள்ளிமேடு, மெட்டுவழுவு மற்றும் நாதேகவுண்டன்புதூரில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின்கீழ் தார்சாலை அமைக்கும் பணிகளையும் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பூலுவப்பட்டி பேரூராட்சியின் வடிவேலம்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம், சிறுவானி மெயின்ரோடு முதல் ஆட்டோகாரர் தோட்டம் வரை நபார்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட தார்சாலையையும், சித்திரைசாவடி அண்ணாநகர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமுதாய கழிப்பிடத்தையும் திறந்துவைத்து பார்வையிட்டார்.

பின், தென்கரை பேரூராட்சி பகுதிகளான வார்டு 5 மற்றும் 7 நீலியம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தார்சாலையையும், சென்னனூர் முதல் மத்தபாளையம் வரை நபார்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தார்சாலையையும், அம்பிகடை, கரடிமடை ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தார்சாலையையும் மக்கள் பயன்பாட்டிற்கு எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆலந்துறை பேரூராட்சி பகுதிகளான பெருமாள்கோவில்பதி, காளிமங்கலம், முகாசிமங்களலம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை எஸ்.பி.வேலுமணி, அந்த மனுக்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்கும்படி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்கள் அனைவருக்குமான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்பட துவங்கியுள்ளன.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் தனிநபர் வீடுகட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் பயனாளி ஒருவருக்கு ரூ.2.10 லட்சம் மானியம் வீடுகட்ட வழங்கப்பட்டு வருகின்றது. வீடு விரிவுபடுத்த ரூ.1.60 லட்சம் மானியம் வழங்கப்படுகின்றது.
மேலும், வீட்டுமனைப்பட்டா உள்ளவர்களுக்கு வீடுகட்ட ரூ.6 லட்சம், வங்கி கடன் வழங்கப்படுவதுடன் அதற்கு வட்டியில் 6.50 சதவிகிதம் அரசு மானியம் வழங்கப்படுகின்றது.
அதேப்போல் ஏற்கனவே செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் புதியதாக துவங்கப்படும் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில்கடன்கள் வங்கியின் மூலம் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இவற்றினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆலந்துறை பகுதியில் வன விலங்குகளால் உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.91,666 வீதம் 3 பயனாளிகளுக்கும், பயிர்சேதமடைந்த 3 பயனாளிகளுக்கும் என மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ.3.35 லட்சத்திற்கான காசோலையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இந்நிகழச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாவட்ட வன அலுவலர் ராசுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் த.கிருஷ்துராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் வெங்கடபிரியா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கணேஷ்ராம் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.