500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய பாஜக அரசு அறிவித்ததைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி சிலர் வயிற்றில் அடித்தபடி பிச்சையெடுக்கும் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் சாமானிய மக்களும், தொழிலாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அன்றாட செலவுகளுக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர்கள் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 160-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.