கோவை அருகே தனியார் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை பழங்குடியின மக்களுக்கு வழங்கிட வலியுறுத்தி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள முட்டத்துவயல் பகுதியில் அமெரிக்க கவுண்டர் என்ற முத்துச்சாமி என்பவருக்கு சொந்தமான 44.30 ஏக்கர் நிலம், நில உச்ச வரம்பு சட்டப்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 1992 ம் ஆண்டு 46 பேருக்கு அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது. பழங்குடியின மற்றும் பட்டியல் மக்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட அந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் 44 ஏக்கர் நிலத்தை தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கக்கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சமூதி நீதிக்கட்சி, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நில மீட்பு போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் காவல் துறையினரின் தடுப்புகளை மீறி, பிரச்சனைக்குரிய இடத்தில் நான்குபுறமும் குச்சிகளை நட்டு கயிறு கட்டி குடியேறும் போராட்டம் நடத்தினர். பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை அதிகாரிகள் பல்வேறு நபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து இருப்பதாகவும், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமப்பில் இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். ஈஷா யோகா மையம் உள்ளிட்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை பழங்குடியின மக்களுக்கு பிரித்து தர வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், நிலங்களை பழங்குடியின மக்களுக்கு பிரித்து தரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் மதுராந்தகி, வட்டாச்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக 2 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.