வேளாண் கடன் வழங்கும் விழாவில் 63 பயனாளிகளுக்கு ரூ.61.60 லட்சம் மதிப்பில் கடன் திட்ட ஆணைகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை, மாவட்டம், தொண்டாமுத்தூரில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, 63 விவசாயிகளுக்கு ரூ.61.60 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உழவர்களின் வாழ்க்கை உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். வேளாண் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் கடனுதவிகளும், தொடர்ந்து கடன் தொகையை தவறாமல் செலுத்தி வரும் விவசாயிகளுக்கு வட்டி மற்றும் அசல் தள்ளுபடி என பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நடப்பாண்டில் ரூ.210 கோடி பயிர்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 7385 விவசாயிகளுக்கு ரூ.84.87 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. புழக்கத்திலிருந்து ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பையடுத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனுதவி வழங்க இயலாத சூழல் ஏற்பட்டது.
இருப்பினும் விவசாயிகளின் சம்பாபயிர் சாகுபடி வழங்க வேண்டியதை முதலமைச்சர் கருத்தில் கொண்டு அரசானை வெளியிட்டு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்களின் மூலமாக பயிர்கடன் வழங்க திட்டமிட்டதின் படி தற்போது 63 விவசாயிகளுக்கு ரூ.61.60 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்படுகிறது'' என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் வரவேற்புரையாற்றினார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் பி.லோகநாதன் திட்ட விளக்கவுரையாற்றினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு நன்றிகூறினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.கனகராஜ், அம்மன் கே.அர்ஜுனன் , எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, இணைப்பதிவாளர் டியுகாஸ் வனிதா, துணைப்பதிவாளர்கள் ரகுபதி, மகேந்திரன், சென்னனூர், தீத்திபாளையம், மத்வராயபுரம், தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கலிக்கநாயக்கன்பாளையம், நாதகவுண்டன்புதூர், நரசிபுரம், போலுவாம்பட்டி, மத்வராயபுரம், தீத்திபாளையம், வேடப்பட்டி உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.