
உடல் உறுப்பு தானத்திற்காக எட்டு மணிநேரத்தில் 13,206 பேரை கையெழுத்திட வைத்து கின்னஸ் சாதனை படைத்த ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு “சிறந்த பொது சேவை திட்ட விருது” வழங்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள லலித் ஹோட்டலில் நடந்த சர்வதேச மருத்துவ கருத்தரங்கையொட்டி நடந்த விருது வழங்கும் விழாவுக்கு பிரபல நடிகையும், மக்களவை உறுப்பினருமான கிரண் அனுபம் கேர் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சருமான டாக்டர் சி.பி. தாக்குர் பங்கேற்று விருது வழங்கினார். எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் மருத்துவ சேவைப்பிரிவு மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி வி.ராமகிருஷ்ணா விருதினைப் பெற்றுக் கொண்டார்.
சர்வதேச சுகாதார கருத்தரங்கு மற்றும் விருதுகள், பெருமளவில் பயன் தரும் வகையில் செயல் திறன் மிக்க மருத்துவ சேவை செய்த நிறுவனம் மற்றும் தனிநபர்களை பாராட்டும் விதத்தில் வழங்கப்படுகின்றன. சர்வதேச அளவிலான விருது பெறும் இவர்களை பாராட்ட நாடு முழுவதில் உள்ள பெரும் மருத்துவ நிறுவனங்கள் பங்கேற்றன.
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையானது கடந்த மார்ச் 19ம் தேதி 2016 சனிக்கிழமையன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் உடல், உடல் உறுப்புதான நிகழ்ச்சியை நடத்தியது. எட்டு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் 13 ஆயிரத்து 206 பேர் கையெழுத்திட்டு கின்னஸ் சாதனை படைத்தனர்.
இந்த விருதானது, நிறுவனத்தின் சாதனைக்காக மட்டுமின்றி போட்டிகள் நிறைந்த மருத்துவ உலகில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டுள்ளதற்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகத்தினர், பணியாளர்களின் உயர்தர சிகிச்சையுடன் தனிப்பட்ட முறையிலான கவனிப்பும் காரணம். இந்த மண்டலத்தில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக திகழ நிர்வாகம் உயரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.