ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம் 1988-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1ம் தேதியினை உலக எய்ட்ஸ் தினமாக அனுசரித்து வருகிறது. ஒவ்வொரு தனிநபரும் எச்ஐவி இல்லா சமூகம் உருவாக தங்களின் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும் ஒருங்கிணைந்து உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்கள், சமூகம் சார்ந்த தொண்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் பொருட்டு சுமார் 900-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஊர்வலமாக சென்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் எச்ஐவி-க்காக பணிபுரிவோரின் அர்ப்பணிப்பினை புதுப்பிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எச்ஐவிக்கு எதிரான பணிகள் என்பது நாம் அனைவரின் ஒருங்கிணைந்த பொறுப்பாகும். சிறந்த பண்புகளால் புதிய எச்ஐவி தொற்று ஏற்படாமல் தடுப்பது, எய்ட்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு கடைநிலை மக்களையும் சென்றடைதல் உள்ளிட்டவற்றில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
கோவை மாவட்டத்தில் இரண்டு கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், 6 இணை கூட்டு மருந்து சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகிறது. இதில், 2015- 16ம் ஆண்டில் 9175 நபர்கள் பதிவு செய்து 3879 தொடர் சிகிச்சை மற்றும் 2016-17 அக்டோபர் மாதம் வரை 9479 நபர்கள் பதிவுசெய்து அதில் அக்டோபர் 2016 வரை 3655 நபர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ்-யினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கி உழவர் பாதுகாப்புத் திட்டம், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, பசுமை வீடுகள் திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா, அரசு பேருந்தில் இலவச பயண அட்டை உள்ளிட்ட பல உதவிகளை செய்து வருகிறது'' என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஏ.எட்வின் ஜோ, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் மருத்துவர் எம்.தமிழ்மணி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் பி.ஜி.பானுமதி, துணை இயக்குநர் மருத்துவர் எம்.சக்திவேல், இரத்தவங்கி மருத்துவ அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியாளர்கள், அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம், ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா கலைக் கல்லூரி, நிர்மலா கலைக் கல்லூரி, பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, ரத்தினம் கலைக் கல்லூரி, கேஜி நர்சிங் கல்லூரி, கேஎம்சிஎச் நர்சிங் கல்லூரி, கொங்குநாடு நர்சிங் கல்லூரி, அன்னை மீனாட்சி நர்சிங் கல்லூரி உள்ளிட்டவற்றின் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.