கடந்த புதன்கிழமை அதிகாலை வங்கக் கடலில் உருவாகிய நாடா புயல் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் இந்த நேரத்தில் 'நாடா புயல்' படிப்படியாக வலுவிழக்கு
இந்த நிலையில், நாடா புயலின் தாக்காத்தால் கோவையில் கணிசமான அளவு மழை பெய்யும் என்று கோவை வேளாண்மை பலகலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறை தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.
மழை குறைவு
இந்த காலத்தில் கோவையில் மட்டும் 323 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால் சென்ற பருவ மழையின் போது கோவையில் 96 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவானது. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 674 மில்லி மீட்டர் மழை கோவையில் பெய்து வருகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப பருவகால மழைகளின் அளவுகள் சிறிது மாறுபடலாம். ஆனால், கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு கோவையில் இந்த வருடம் மழையின் அளவு மிகவும் குறைந்துள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் கோவையில் 227 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.
‘நாடா புயல்’
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள நாடா புயலால் கோவைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், வரும் 2,3 மற்றும் 5ம் தேதிகளில் கோவையில் அனேக இடங்களில் மழை பெய்யும். சுமார் 65 மில்லி மீட்டார் வரை கோவையில் மழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ம் தேதிக்குப் பிறகு 2 முதல் 3 நாட்களுக்கு மழை இருக்காது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போதைய கணக்கீட்டின் படி மழை பெய்தாலும் வருடாந்திர மழையின் சராசரி அளவை எட்டுவது மிக கடினம்.
மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலை கழிவுகள், மரங்களை வெட்டுதல் போன்ற காரணத்தால் கார்பன்டை ஆக்சைடு மற்றும் மீதேன் வாயு போன்றவை அதிகரித்து வளிமண்டலத்தை வெப்பமடைய செய்கின்றன.சிறு வயதில் இருந்தே மழைக்கான முக்கியத்துவத்தையும், அது தடைபடுவதற்கான காரணத்தையும் குழந்தைகளுக்கு தெரியப்படுத்தி வளர்க்க வேண்டும். மரங்களை நடவு செய்ய பழக்க வேண்டும். அப்போது தான் வரும் காலத்தில் மழையின் அளவு குறைவதை தடுக்க முடியும்.
இவாறு அவர் கூறினார்.
மழை நிலவரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
வங்கக்கடலில் உருவாகியுள்ள நாடா புயலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளது. மழை பாதிப்பு தொடர்பாக 1077 என்ற தொலைபேசி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பவானி ஆற்றுப்பகுதி, பேரூர் உள்ளிட்ட 31 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளவும், மக்களை பாதுகாக்கவும் 4 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.