கோவை நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது நிலத்தினை கே.எம்.சி.எச் நிர்வாகத்தினர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனை தடுத்த அவருக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் வெள்ளியன்று (இன்று) கோவை மாவட்ட காவல் ஆணையரைச் சந்தித்து மனு ஒன்றினை அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் நஞ்சப்பன் கூறியதாவது:-
கடந்த 1991-யில் என்.ஜி.பி கல்லூரியின் பின்புறத்தில் உள்ள 68 சென்ட் இடத்தினை நான் வாங்கினேன். அப்போது கே.எம்.சி.எச் நிறுவனத்தினர் எங்களது இடத்தின் அருகே சுற்றுச் சுவர் கட்டத் துவங்கினர். அதில், கூடுதலாக சுமார் 10 சென்ட் அளவிலான இடத்தினை ஆக்கிரமிக்கும் வகையில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்றது.
இதுதொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் புகாரும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, கே.எம்.சி.எச் சுற்றுச் சுவர் கட்டும் பணியை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தொடர்ந்து இந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியினை மேற்கொள்ள மாட்டோம் என அப்பணியில் ஈடுபட்டிருந்தோரிடம் காவல் துறை சார்பில் எழுதியும் வாங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியில் கே.எம்.சி.எச் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை நிறுத்தச் சொன்ன எனது மனைவி சரஸ்வதியை தகாத வார்த்தையில் திட்டி, எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
நாங்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து உழைத்து வாங்கிய இந்த இடத்தினை கேஎம்சிஎச் நிறுவனத்தில் பணிபுரியும் தண்டபானி, சிவகுமார், நல்லதம்பி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.