கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 87-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் வெள்ளியன்று (இன்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்து மற்றும் குளோரின் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதையும் பார்வையிட்டார்.
பின், 87-வது வார்டுக்கு உட்பட்ட சுண்ணாம்புக்கால்வாய் அண்ணாநகர் பகுதியில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை ஆய்வு செய்தார்.

முன்னதாக, அப்பகுதியில் தள்ளுவண்டி மூலம் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரியிடம் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறி, வியாபாரியிடம் 50 மைக்ரான் குறைவாக இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் க.விஜயகார்த்திகேயனுடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.