கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அருகே அமைந்துள்ளது குறிச்சி குளம். சரியான மழைப்பொழிவு இல்லாததாலும், ஆகாயத் தாமரைகளின் அதிகப்படியான வளர்ச்சியினாலும் இக்குளம் வரண்டு காணப்படுகிறது. தற்போது, பல தொழிற்சாலை நிறுவனத்தினர் தங்களது கழிவுகளை இக்குளத்தில் கொட்டி வருவதாலும் சுகாதாரமின்றி காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், இந்த குறிச்சி குளத்தின் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் மீட்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டது.
இந்நிலையில், இன்று குறிச்சி குளத்தில் வாகனம் மூலம் தொழிற்சாலைக் கழிவுகளை கொட்ட முற்பட்டனர். அதனைக் கண்ட குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கழிவுகளை கொட்டிய அந்த வாகனத்தை சிறை
பிடித்து பொதுப்பணித் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும் எந்த அதிகாரியும் அப்பகுதிக்கு வராததால் குப்பை கொட்டிய நபரிடமே அதனை எடுக்க வைத்து, பின் எச்சரித்து அனுப்பப்பட்டது.