கடந்த ஏப்ரல் 4ம் தேதி ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயிலில் இருந்து இறங்கியவர் சுப்பம்மாள். ஆந்திர மாநிலம் பொன்னூர் பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி, ரயில் பிரயாணத்தின்போது தவறுதலாக குடும்பத்தினரை பிரிந்து கோவை வந்தார். புரியாத மொழி, புதுப்புது மனிதர்கள், கூட்ட நெரிசல் என்று விழி பிதுங்கி நின்றார் சுப்பம்மாள். இது குறித்து தகவலறிந்த, கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ரயில் நிலையம் சென்று அந்த மூதாட்டியை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து சுப்பம்மாளிடம் பேசி அவர் ஊர், பெயரை பெற்ற ஈர நெஞ்சம் மகேந்திரன், சுப்பம்மாளின் குடும்பத்தினர் குறித்த விவரங்களை சேகரித்தார்.முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுப்பம்மாளின் புகைப்படத்துடன் அவர் தற்போது இருக்கும் முகவரியை சேர்த்து பதிவு செய்தார்.
இந்த தகவல் ஹைதராபாத்தில் உள்ள சுப்பம்மாளின் மகன் ராமாராவ் என்பவருக்கு கிடைக்கவே, இன்று கோவை வந்த அவர் ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் தங்கியிருந்த தாயை சந்தித்தார். மகன் வந்ததையறிந்த சுப்பம்மாள் ராமாராவை கட்டி அழுத காட்சி காண்பவர் நெஞ்சை கசிய வைத்தது. தொடர்ந்து இன்று சுப்பம்மாள் தனது மகனுடன் ஆந்திரா சென்றார்.