உலகில் இசைக்கு அடிமை ஆகாதவர் எவரும் இல்லை. ஆரம்பத்தில் இசை என்பது, மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து, தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் செல்ல தொடங்கிவிட்டது. அதில், இன்று உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைகளை உருவாக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள், உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் பின்பற்றப்படுகிறது.
இந்திய திரையுலகில் மாஸ்ட்ரோ பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜாவும், ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர் ரஹ்மானும் தமிழர்கள் என்பது நமது நெஞ்சை நிமிர்த்துகின்றன. இசை தமிழர்களின் வாழ்வில் இணைந்து விட்ட ஒரு கலை. அப்படிப்பட்ட இசையில் ஒருபகுதியாக டிரம்ஸ் இசையும் உள்ளது. டிரம்ஸ் இசை என்றாலே டிரம்ஸ் சிவமணி தான் நம் ஞாபகத்திற்கு வரும். அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது நமக்கு பெருமைதான். இவர்களுக்கு மத்தியில் நாம் காணும் இன்னொரு வருங்கால டிரம்ஸ் இசை கலைஞர் ஆதிஷ் இவரும் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது நமக்கு இன்னும் பெருமை. இவருடைய டிரம்ஸ் வாசிப்பு சற்று வித்தியாசமானதே அதாவது, கண்ணை கட்டிக்கொண்டு டிரம்ஸ் வாசிப்பதில் இவரை பார்ப்பவர்கள் அனைவரும் வியக்கின்றனர்.
கோவை, காந்திபுரம் ரத்தினபுரி பகுதியில் வசிப்பவர் சுந்தரராஜன் இவர் காந்திபுரம் 7வது வீதியில் மின்னணு பாகங்கள் விநியோகஸ்தராக பணி செய்து வருகிறார். இவரது மகன் ஆதிஷ்(13). சுகுணா மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி பருவத்திலே இவருக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தை கண்டறிந்த இவருடைய பெற்றோர் அதனை சரியான முறையில் கற்று கொடுப்பதற்காக இளம் வயதிலேயே இசை பயிற்சி பள்ளியில் சேர்த்துவிட்டனர் . மேலும், ஆதிஷின் முயற்சியை ஊக்கப்படுத்துவதற்காக வீட்டிலேயே இசை வாத்தியத்திற்கான டிரம்ஸ் வாத்தியத்தை வாங்கி கொடுத்தும் ஆதிஷுக்கு தேவையான அனைத்து வசதியையும் இன்றும் செய்து கொடுத்து வருகிறார்.
அதற்கு பலனாக ஆதிஷ் பல்வேறு சாதனைகளை இன்றுவரை செய்துவருகிறார்.

இது குறித்து ஆதிஷ் நம்மிடம் பகிருகையில்:-
நான் பள்ளி பருவத்தில் 2ம் வகுப்பு படிக்கும் போது எனக்குள் இருந்த இசையின் ஆர்வத்தை எனது பெற்றோர் ஊக்குவித்தனர். முதலில் கித்தார் வாசித்து வந்தேன். அதன்பின் என்னை இசை பயிற்சியில் எனது பெற்றோர்கள் சேர்த்தனர். அங்கு உள்ள இசை பயிற்சியாளர் இளங்கோ என்னை முதலில் டிரம்ஸ் வசித்து பழகு என்றார். அதன் மூலம் உடலில் உள்ள அனைத்து தசைகளும் சுறுசுறுப்புடன் இருக்கும் என்றார். பின்னர் அதன்பின் அனைத்து இசைகளும் பழகுவதற்கு டிரம்ஸ் பயிற்சி உதவியாக இருக்கும் என்றார். அதனை தொடர்ந்து, டிரம்ஸ் வாசிப்பதற்கு நான் முக்கியத்துவம் கொடுத்தேன். 6ம் வகுப்பு படிக்கும் போது டிரம்ஸ் வாசிப்பதில் புது முயற்சியாக கண்களை கட்டிக்கொண்டும் டிரம்ஸ் வாசிப்பதற்கு பயிற்சி எடுத்தேன். எனது இந்த முயற்சியின் பலனாக பள்ளிகளில் நடக்கும் விழாக்களில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அதன்பின், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன்.

மேலும், கடந்த ஜனவரி மாதம் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி துவங்கும் முன் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் முன்னிலையில் டிரம்ஸ் வாசிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறுவதற்கு பள்ளியில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தனர். ஆசிரியர்கள் எனக்கு கொடுக்கப்படும் பயிற்சி பாடங்கள் செய்வதற்கு எனக்கு ஏற்றவாறு காலஅவகாசங்கள் கொடுப்பார்கள். அதேபோல், வீட்டில் இரண்டு மணி நேரம் படிப்பதற்கு தனி பயிற்சி வகுப்பு ஏற்பாடுகள் எனது பெற்றோர்கள் செய்து கொடுத்துள்ளனர். எனவே, ஆசிரியர்களின் ஓத்துழைப்பும், வீட்டில் பெற்றோர்களின் ஊக்குவிப்பும் என்னை உயர்த்தியது. மேலும் லிம்கா சாதனை படைப்பதே எனது அடுத்த இலக்கு அதற்கு முழு முயற்சி எடுத்து வருவதாக கூறினார்.

இசைக்கலையை ஆர்வமுடன் கற்றுக்கொள்ளும் பலருக்கு அதை அரங்கேற்றம் செய்வதற்கான மேடை வாய்ப்பு சுலபமாக கிடைத்து விடுவதில்லை. இலக்கை நோக்கி போராடும் இந்த சிறுவனின் இசை பயணத்துக்கு வாழ்த்துக்கள்.