சாலையோரங்களில் உடுத்த உடைகள் கூட இல்லாமல் ஆதரவற்றுள்ள மக்களுக்கு உதவும் வகையில் அன்யா பொட்டிக் மற்றும் கம்பா நிறுவனம் இணைந்து "வார்டு ரோடு'' என்னும் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சாலையோரங்களில் பெரும்பாலான மக்கள் உடைகள் இன்றியும், பல சாலை ஓரத்தில் பெண்கள் சரியான துணிகளின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணிகளை தந்து உதவும் வகையில் அன்யா பொட்டிக் மற்றும் கம்பா நிறுவனம் ஆகியவை இணைந்து "வார்டுரோடு" என்னும் புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், மக்கள் தங்களிடம் உள்ள பயன்படுத்தாத பழைய துணி அல்லது சிறிய துணிகளை "வார்டுரோடு" திட்டத்தின் இரும்பாலான பெட்டியில் போட்டுவிட்டால் அதனை சேகரித்து துணிகளின்றி உள்ள பலருக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஆர்.எஸ்.புரம் மற்றும் கிராஸ்கட் சாலையில் "வார்டுரோடு" என்றும் இரும்புப் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
வார்டுரோடு திட்டம் குறித்து அன்யா பொட்டிக், கம்பா நிறுவனத்தினர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் பல ஆதரவற்ற மக்கள் சாலை ஓரத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு எப்படியேனும் உணவு மற்றும் இருப்பிடம் கிடைத்துவிடுகிறது. ஆனால், துணி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
அந்த ஆதரவற்றோர் கிழிந்த துணிகளை உடுத்தி வாழ்ந்து வருகின்றனர். ஒரு முறை கோவை அரசு பொது மருத்துவமனை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த போது அந்த மருத்துவமனையின் வெளியில் பலர் இவ்வாறு கிழிந்த துணிகளையும், சிலர் சரிவர துணிகளின்றியும் அமர்ந்திருந்தனர். அதுவே எங்களுக்கு இத்திட்டம் துவங்க அடிப்படையாக அமைந்தது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய துணிகள், தங்களால் பயன்படுத்த முடியாத சிறிய துணிகள் போன்றவற்றை வார்டுரோடு இரும்புப் பெட்டியில் போட்டு விட்டால் அந்த துணி ஏழை மக்களுக்கு சென்றடையும்.
அத்துடன், அந்த துணிகளுடனேயே தங்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரியினை எழுதி துணிகளை வழங்க வேண்டும். அந்த துணி யாரிடம் தரப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் உங்களுக்கு தகவல் வந்துவிடும். புதுத் துணிகளையும் இதில் தானம் செய்யலாம். ஆதரவற்ற நபரின் பிறந்தநாளன்று அந்த புதுத் துணி பொருத்தமாக இருந்தால் அவரிடம் தரப்படும்.
வார்டுரோடு இரும்புப் பெட்டி தரமான இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளது, இதனால் மழை மற்றும் வெயில் காலத்தில் அது சேதமடையாது. மேலும், அதற்கென பாதுகாவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். வருடம் முழுவதும் 24 மணி நேரமும் இது செயல்படும்.

கோவையில் தற்போது இரு இடத்தில் இந்தப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டம் முழுக்க 20 பெட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்பட்டு முடிந்தபின் கோவையின் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை விரிவுபடுத்த உள்ளோம்.'' என தெரிவித்தனர்.