முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்தனர். மேலும், அனைத்து மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் அந்தந்த மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.

கோவை அண்ணாசிலை சிக்னல் அருகே அ.இ.அ.தி.மு.க. வின் தலைமை அலுவலகம் உள்ளது. இதய தெய்வம் மாளிகை என்று பெயரிடப்பட்ட இந்த அலுவலகத்தில் கட்சித்தொண்டர்கள் பலர் தினமும் கூடுவர். முதல் அமைச்சர் உடல் நிலை மோசமானதையடுத்து இன்று அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். அனைத்து செய்தி சேனல்களையும் புரட்டிக் கொண்டிருக்கும் அவர்கள், முதல்வர் திரும்ப வராமல் எங்களுக்கு சந்தோஷம் ஏது என்று விரக்தியுடன் தெரிவித்தனர்.