தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஜெயலலிதா-வின் உடல்நிலை குறித்து பலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலர், முதல் அமைச்சர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளனர். முகநூலில் பேசப்பட்ட தலைப்புகளில் (டிரெண்டிங்) ஜெயலலிதாவின் பெயர் முதல் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் சிலர், முதல் அமைச்சர் உடல் நிலை குறித்த அவதூறான தகவல்களை பதிவேற்றி வருகின்றனர். இந்த பதிவுகளை பார்க்கும் ஜெயலலிதா நலம் விரும்பிகள் கொதிப்படைந்து பதிவிட்ட அந்த நபரை திட்ட, பதிலுக்கு எதிர்தரப்பில் இருந்தும் தாறுமாறான வார்த்தைகள் வெடிக்க இரு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் சண்டையிட்டு கொள்கின்றனர்.
இந்த நிலையில், முதல் அமைச்சர் குறித்து அவதூறு பரப்புவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.