உலகம் முழுவதும், உலக மண் தினமானது மண்ணின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு செய்வதற்காக கொண்டாடப்படுகிறது. இயற்கை அமைப்பில் மண்ணானது உணவு, நீர் மற்றும் ஆற்றல் போன்றவற்றை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க அங்கமாக உள்ளது.
மேலும், இழந்துவரும் உயிரின வேறுபாடுகளையும் மற்றும் பருவநிலை மாற்றத்தையும் சீர்படுத்தும் ஊக்கியாக மண் செயல்படுகிறது. எனவே, உலக மண் தினத்தையொட்டி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மண்ணியல் மற்றும் வேளாண்மை வேதியல் துறை முனைவர். மூ.ராமமூர்த்தி 5-வது ஆண்டு நினைவுரையை ஏற்பாடு செய்தது.

முனைவர் மூ.ராமமூர்த்தி அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு உரையை, தேசிய மண் வகையீடு மற்றும் நிலப் பயன்பாட்டு திட்ட நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் ஆ.வேலாயுதம், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தினார்.

பேராசிரியர் மற்றும் தலைவர், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறை முனைவர் கோ.அருள்மொழிச்செல்வன், அவையோரை வரவேற்று பேசினார். அவரது வரவேற்பு உரையில் முனைவர். மூ.ராமமூர்த்தி 20ம் நூற்றாண்டின் மண்ணியல் விஞ்ஞானிகளில் மிகச்சிறந்த சாதனையாளர் என்று கூறினார்.
தனி அலுவலர், இயற்கை வள மேலாண்மை இயக்ககம் முனைவர் குமார், ஆ.வேலாயுதம் மண்ணியலில் குறிப்பாக மண் வகையீடு, தொலை உணர்வு மற்றும் இயற்கை வள மேலாண்மையில் அரிய பல படைப்புகளை கொடுத்துள்ளார் என்று கூறினார். மேலும் இத்தருணத்தில் மண் வளத்தை நிலைநிறுத்த மண்ணியல் விஞ்ஞானிகள் மிகச்சிறந்த பங்காற்ற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
முனைவர் மூ.ராமமூர்த்தி வெவ்வேறு வகையான மகசூல் குறிக்கோளை அடைவதற்கு மண் ஆய்வு மற்றும் உரப்பரிந்துரையை அளவுசார் முறையில் விளக்கினார், என்பதையும் எடுத்துரைத்தார்.
முன்னதாக பேராசிரியர் மற்றும் தலைவர் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை முனைவர் கோ.அருள்மொழிச்செல்வன் வாழ்த்துரையும், பேராசிரியர் (மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறை) மற்றும் கவுன்சிலர், இந்திய மண்ணியல் சங்கம் மகேந்திரன் நன்றியுரையும் வழங்கினர்.