டவுன்ஹால் பகுதியில் உள்ள பெரியகடை வீதி கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளருக்கும், வங்கி ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என கடந்த மாதம் அறிவித்த நிலையில், வங்கியில் இன்றுவரை பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
இதன் விளைவாக, டவுன்ஹால் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 2000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு டோக்கன் வழங்கப்பட்டு காலை முதல் மாலை வரை பொதுமக்கள் வங்கியில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் இதனை வங்கி ஊழியரிடம் கேட்கையில், அவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், வங்கி ஊழியர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், வங்கியில் காத்திருக்கும் நிலைமாற இரண்டு கவுண்டர் திறக்கவும், ரூபாய் 2000க்கும்மேல் பணம் வழங்கப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.