மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும், ஜெயலலிதாவிற்கு சொந்தமான சொத்துகளை அரசுடமையாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வழக்கு தொடர உள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது முறையான சிகிச்சை அளிக்கதாதலேயே உயிரிழந்து இருப்பதாகவும், ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதாவிற்கு சொந்தமான 'வேதா இல்லம்' உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கட்சி மற்றும் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டிய அவர், அதிமுக பொதுச்செயலளாராக மூத்த தலைவர்களான பி.ஹெச்.பாண்டியன், பண்ரூட்டி ராமசந்திரன் உள்ளிட்டோரில் ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்தார்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மைகளை மறைத்த அப்போல்லா மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மீது சட்ட பூர்வமாக நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், முறையான சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்பிற்கு காரணமான சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.