
கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் சாலை ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அருண்பாபு (60). கடந்த மாதம் 27ம் தேதியன்று (OLX) ஓஎல்எக்ஸ்-யில் கார் ஒன்றின் விற்பனைக்கான விளம்பரத்தினை பார்த்துள்ளார். அதன் விலை 4.5 லட்சமாகும் .
இதைத்தொடர்ந்து அந்த கார் விளம்பரத்தினை பதிவிட்டவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரிக்கையில் அவர்கள் முன்தொகையாக 5 ஆயிரம் ரூபாயினை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். அருண்பாபுவும் அந்த தொகையினை செலுத்தியுள்ளார்.
பின், அந்த நபர்களிடம் இருந்து எவ்வித தகவலும் அருண்பாபுவிற்கு வரவில்லை . தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அருண்பாபு இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைமில் கடந்த 31ம் தேதியன்று புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பொள்ளாச்சியை சேர்ந்த நரேஷ் (22), செரிஃப் (22), அபுதாகிர் (22), முஸ்தப்பா (21), முசாதிக் (21), சம்ருதின் (19) மற்றும் மதினா பேகம் (29) ஆகிய 7 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த 7 பேரையும் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இதுபோன்று போலியான விளம்பரங்கள் கொடுத்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த 7 பேரின் புகைப்படங்களும் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.