கோவை மாநகரின் சில பகுதிகளிலும் புறநகரில் அதிக இடங்களிலும் தென்னை, வாழை, கத்தரி, வெங்காயம் போன்ற பயிர்களின் விவசாயம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.
இதில், தொண்டாமுத்தூர் மற்றும் பேரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கோவையில் சின்ன வெங்காய விளைச்சல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படுகிறது.
நடவு
வைகாசி மாதம் முதல் வாரம் தொடங்கி இரண்டாம் வாரம் முடிவதற்குள் சின்ன வெங்காயம் நடவு செய்யப்படுகிறது. தொடர்ந்து, உரமிட்டு, நீர்பாய்ச்சி, களையெடுத்து 120 நாட்களுக்கு பிறகு ஆவணி மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. அதாவது, மே மாதம் தொடங்கி செப்டம்பர் மாத தொடக்கத்திற்கு முன்பாக அறுவடை செய்யப்படுகிறது. பிறகு சந்தைகளுக்கு அனுப்பபடுகிறது. ஆனால், கோவையின் பல இடங்களில் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து 3 மாத காலங்கள் ஆகியும் விற்பனையாகாமல், வீணாகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்டம் தீத்திபாளையத்தை அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் கூறியதாவது :- எனது குடும்பம் விவசாய குடும்பம். தலைமுறை தலைமுறையாக விவசாயம் மட்டுமே செய்து வாழ்ந்து வருகிறோம். என்னோடு சேர்த்து என் குடும்பத்தார்க்கு வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. என் குடும்பத்திற்கு சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இந்த பருவ காலத்தில் சின்ன வெங்காயம் பயிர் செய்தேன். நான் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ளனர்.
மகசூல் அதிகம்
கோவையில் மட்டுமல்லாது, தமிழகத்தில், ஒட்டன்சத்திரம், நாமக்கல், துறையூர் மற்றும் பல்லடம் ஆகிய பல பகுதிகளில் இந்த பயிர் பயிரடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் கோவையில் அதிக நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டது. அதனால் தற்போது சின்ன வெங்காய மகசூல் பெருகியுள்ளது. மேலும், இந்த ஆண்டு மழை குறைவு என்பதால், மிகச்சிறிய அளவில் வெங்காயங்கள் கிடைத்துள்ளது. இது குறைந்த விலைக்கு போகும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் சின்ன வெங்காயத்தை பயிரிட்டு விற்பனை செய்ய சுமார் 1 முதல் 1.25 லட்சம் வரை செலவாகும். அப்படி அறுவடை செய்த வெங்காயத்தை கிலோ நாற்பது ரூபாய்க்கு விற்றால் கணிசமான லாபம் பெறமுடியும். தற்போது, கிலோ 7 முதல் 15 ரூபாய்க்குள் மட்டுமே விற்பனையாகிறது. இதன் காரணமாக எங்களை போன்ற விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கெட்டுபோகும்
ஆவணி மாதத்தில் அறுவடை செய்த சின்ன வெங்காயங்களை தீபாவளிக்குள் விற்பனை செய்வோம். ஆனால், தீபாவளி முடிந்தும் இன்னும் விற்பனையாகாமல் சுமார் 6 டன் வெங்காயங்கள் என் வீட்டில் மட்டும் தேங்கி கிடக்கிறது. 50 முதல் 100 நாட்களுக்கு மட்டுமே இந்த சின்ன வெங்காயங்கள் கெட்டு போகாமல் பாதுகாக்க முடியும். அவ்வாறு 100 நாட்களாகியும் விற்பனையாகவிட்டால் சேமித்து வைத்த அத்தனை சின்ன வெங்காயங்களும் பயிராக முளைத்துவிடும். ஒவ்வொரு விவசாயிக்கும் இது மேலும், நஷ்டத்தை தரும்.

தீர்வு?
இவ்வாறு வெங்காய மகசூல் அதிகரிக்கும் நேரத்தில், உபரியாக உள்ள வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும். இப்போது என்னிடம் உள்ள சின்ன வெங்காயங்கள் கெட்டு போகுமானால் 3 லட்சம் ரூபாய் எனக்கு இழப்பு ஏற்படுகிறது. அடுத்த கட்டமாக விளைச்சல் செய்ய எங்களிடம் எந்த பணமும் இல்லை. தக்காளி, காலிபிளவர் போன்ற பயிர்களை இடைவெளிகளில் பயிரிட்டு வந்தேன். ஆனால், தற்போதைய சூழலில் என்னால் எதையுமே செய்யமுடியாத நிலை உருவாகிவிட்டது.

இவ்வாறு நமக்காக உழைக்கும் அந்த விவசாயி கண்ணீர் மல்க கூறினார்.
உடனடியாக அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை மறந்தால் நாட்டின் மீது பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும். மேலும், அடுத்த தலைமுறையில் விவசாயம் என்பதே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஏற்படவுள்ள நஷ்டத்தை, முன்கூட்டியே அறிந்து அவர்களுக்கு நிவாரணமோ அல்லது விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்வது நமது அரசின் பொறுப்பு என்றும், இதை உடனடியாக அரசு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.