கோவை மலுமிச்சம்பட்டி செட்டிபாளையம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஜான்சி ஜெலினா (35). இவரது கணவர் பிராங்க்ளின் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதியினருக்கு பியர்லின் (7) என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 1 ஆண்டு காலமாக தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வருமானம் இன்றி குடும்பம் நடத்த சிரமமாக உள்ளதால் தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கடந்த நவம்பர் 17ம் தேதியன்று போத்தனூர் காவல் நிலையத்தில் ஜான்சி புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விசாரணை செய்த காவல் துறையினர் இருவரையும் சேர்ந்து வாழ அறிவுறுத்தியது. இதையடுத்து, இரு நாட்களில் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்வதாக பிராங்க்ளின் தெரிவித்துச் சென்றவர் திரும்பி வராததால் கணவர் தன்னை ஏமாற்றுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஜான்சி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
இந்நிலையில், மக்கள் குறை தீர்ப்பு நாள் ரத்து செய்யபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்ததைத்தொடர்ந்து, வெளியே வந்த அவர் திடீரென்று சேலையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி காவல் நிலையதிற்கு அழைத்துச் சென்று அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.