2016 டிசம்பர் 5ம் தேதி அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா உடல் நலம் இன்றி மறைந்தார். தமிழகத்தின் ஆளும் கட்சியின் அதிகாரம் மிக்க தலைவரின் மறைவு தமிழக அரசியல் சூழல் நிலையை மாற்றி இருக்கிறது. அதிமுகவின் தலைமை யாரிடம் போகும் என்பது அந்தக் கட்சியின் பிரச்சனை என்று வைத்துக் கொண்டாலும், தமிழக அரசியல் சூழலில் வேறுவிதமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலராக செயலாற்ற வேண்டுமென அக்கட்சி தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபோன்ற பல்வேறு சூழ்நிலைகளில் தமிழ்நாட்டை எந்த கட்சி யார் ஆளப்போகின்றனர் என்ற பல்வேறு கேள்விகள் தமிழ்நாட்டு மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் ஆனால், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளாரா? தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்றுள்ளதா? இதுபோன்ற கேள்விகளுக்கு கோவையில் கல்லூரி மாணவர்களின் பதில்கள் எவ்வாறு உள்ளது என்பதை காண்போம்!
கல்லூரி மாணவி தர்ஷினி கூறுகையில்;
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அதிக அளவில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், மாணவர்களால் தாங்க முடியாத அளவுக்கு திணிக்கப்படும் படிப்புச் சுமை, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பாடம் என்று பல்வேறு குறைபாடுகள் இருந்ததால் அனைத்தையும் களையும் வகையில், அனைத்துத் தரப்பு மாணவர்களும், ஒரே மாதிரியான பாடத்தை, தரமான பாடத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காக கடந்த திமுக ஆட்சியின்போது சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சமச்சீர் கல்வித் திட்ட சட்டம் கொண்டு வரப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி சட்டசபையில் இயற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 1 மற்றும் 6 ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் முதல் கட்டமாக 2010ம் ஆண்டு கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டு அதிமுக பதவியேற்றபின் முதல்வர் ஜெயலலிதா மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
கல்லூரி மாணவன் அபிநந்தன் கூறுகையில்;

2011ம் ஆண்டு அதிமுக பதவியேற்றபின் முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்த சிறப்பான திட்டம் 'மழைநீர் சேகரிப்புத் திட்டம்'. இத்திட்டம் வீடுகள் மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், குடியிருப்புகளில் செயல்படுத்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய இத்திட்டம் இன்று நம் மனதை விட்டு வெகுதூரம் போனது. இன்று புதிதாக பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் வளர்ந்துள்ளது. ஆனால், அங்கு மழைநீர் சேமிப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வரக்கூடிய ஆட்சியில் இத்திட்டம் தொடருமா என்பதும் சந்தேகம்.
கல்லூரி மாணவி ஸ்மிதா கூறுகையில்;

தமிழ்நாட்டில் விவசாயம் வளர்ச்சி அடையாமல் இருக்க பல மிக முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பருவமழை பெய்யாமல் வறட்சி நிலமாக தமிழ்நாடு மாநிலம் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் விவசாயம் வளர்ச்சி பெறுவதற்கு நாம் அண்டை மாநிலத்தை ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து வருகிறோம். அதற்கு தீர்வு காணும் வகையில் மறைந்த தமிழக முதல்வர் விவசாயத்திற்க்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்ததால் கர்நாடக மாநிலத்திலிருந்து காவேரி அணையின் நீர் தமிழ்நாடு விவசாயத்திற்கு கிடைத்தது. மேலும் முல்லை பெரியார், சிறுவாணி போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டது.
கல்லூரி மாணவன் பரத் கூறுகையில்;

தமிழகத்தில் இலவச கலாசாரத்தைத் துவக்கிவைத்தவர் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தான். சாமானிய மக்களுக்கு இலவசப் பொருள்களாக தொலைக்காட்சி பெட்டி, சமையல் அடுப்பு போன்ற பல்வேறு பொருட்கள் வழஙகப்பட்டதும் திமுக ஆட்சியில் தான். ஆனால், கல்வித்துறையில் தமிழ்நாடு வளர்ச்சி பெரும் வகையில் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை, புத்தகங்கள், மிதிவண்டி உள்ளிட்டவை வழங்குவதை எம்.ஜி.ராமசந்திரன், ஜெயலலிதா ஆகியோர் முதலவர்களாக இருந்தபோதே துவக்கி வைத்தனர். மேலும் 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு பிறகு 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா கல்வியில் வளர்ச்சி பெரும் வகையில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. மேலும் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபயோகப் பொருட்களும் வழங்கப்பட்டது.