முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளது . இந்த மறைவை சற்றும் ஏற்கமுடியாமல் உள்ளனர் கொடநாடு எஸ்டேட் பகுதியினர் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் இருந்தது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட் தான். பலமுறை ஓய்வுக்காக கொடநாடு வந்த ஜெயலலிதா, பின்பு ஓய்வுக்காக மட்டுமல்லாமல் கொடநாட்டிலிருந்தே அரசு அலுவல்களையும் சில சமயங்களில் கவனித்து வந்தார்.
எங்கள் அம்மா ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி கொடநாட்டின் பக்கம் வந்தாலே சகமனிதராகிவிடுவார் என புகழ் மாலை சூடுகின்றனர் எஸ்டேட்வாசிகள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இந்த எஸ்டேட்டை வாங்கிய பின்னர்தான் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் வேலை கிடைத்தது.
.jpg)
ஒருகட்டத்தில் கொடநாடு எஸ்டேட்டுக்கு கொடநாடு, கெரடாமட்டம், சுண்டட்டி, ஈளாடா, கஸ்தூரிபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், கைகாட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்தும் ஏராளமானோர் இங்கு பணிக்காக சென்று வருகின்றனர் என்றனர் அப்பகுதி மக்கள்.
தமிழக மக்களிடையே ஜெயலலிதா என்ற ஒரு பெயரை கூறியவுடன் அடுத்தபடியாக நினைவுக்கு வருவது கொடநாடு தான். ஜெயலலிதாவின் அடையாளமான பகுதியாக கொடநாடு எஸ்டேட்டும் அவரது வீடும் தற்போது அப்பகுதி மக்களால் ஒரு நினைவுச் சின்னமாக திகழ்ந்து வருகிறது. ஜெயலலிதாவின் வருகைக்காக பசுமையான மலைக்காடு சாலை, இயற்கையின் காற்று, ரம்மியமான பறவைகளின் இசை என்று கொடநாடு சாலை எப்போதும் காத்துக்கிடக்கும். ஒவ்வொரு முறை கொடநாட்டிற்கு ஜெயலலிதா செல்லும் போதும் அந்த சாலையே ஒரு திருவிழாக் கோலமாகிவிடும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலடிச் சுவடுகளும், காலச் சுவடுகளும் இன்னும் கொடநாட்டில் வாழ்ந்துகொண்டுதான் உள்ளது. ஒவ்வொரு முறை ஜெயலலிதா கடந்து சென்ற கொடநாடு மைல்கல்லும் தற்போது அவரது வருகைக்காக காத்துக்கிடக்கிறது. அவரது மறைவை மனிதர்களாலே ஏற்றுக்கொள்ள முடியாத இக்கட்டத்தில் மைல்கல் ஏற்றுக்கொள்ள வைப்பது முடியாத காரியமே...