தென்னிந்தியாவின் மான்சென்டரான கோவை மாநகரம் கல்வி நகரமாக திகழ்ந்து வருகிறது. இங்கு வெளிமாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களும் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை
தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கஞ்சா பெருமளவு பயிரிடப்படுகிறது. குறிப்பாக, அட்டப்பாடி, நீலகிரி அப்பர்பவானி, சைலன்ட் வேலி ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் இயற்கையாக கஞ்சா பயிர் வளர்வதற்கான சிதோஷ்ண நிலை உள்ளது. இங்குள்ள கொடுக்கி மலை பள்ளத்தாக்குகளில் கஞ்சா விதைகள் காற்றில் பரவி தானாகவே முளைக்கின்றன. இது போன்ற அடர்ந்த வனப்பகுதியில் ஆதிவாசிகள், வனத்துறையினர் தவிர வேறு யாரும் செல்ல முடியாது.
இந்த வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதால் இது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள மாஃபியாகும்பல், அங்குள்ள மலைப்பகுதிகளில் விவசாயம் செய்வதாக இடங்களை குத்தகைக்கு எடுத்து, கஞ்சா செடிகளை தெரியாமல் பயிர் செய்கிறார்கள்.
நூதன கடத்தல்
இதுதவிர, ஆதிவாசிகளை மிரட்டி லட்சணக்கான மதிப்புள்ள கஞ்சாவை சொற்ப விலைக்கு வாங்குகின்றனர். இந்த மாஃபியா கும்பல் போலீசில் சிக்காமல் இருக்க கஞ்சா கடத்துவதாக அவர்களே போலீசுக்கு தகவல் கொடுத்து சில கிராம் கஞ்சாவை சிக்க வைத்து விட்டு வேறு வழியில் கிலோ கணக்கில் கடத்திச்செல்கின்றனர்.
பப்பாளி செடியை விடவும் கஞ்சா செடி மிகவும் சிறிதாக இருக்கும். அடர்ந்த வனப் பகுதிகளில் வளர்க்கப்படும் போது இவை கண்களுக்கு எளிதாக தென்படாது. இந்த பகுதியில் இருந்து தான் மாஃபியா கும்பல் கஞ்சாவை அதிகளவில் பயிரிட்டு கடத்துகிறது.இதுதவிர, கஞ்சா அதிகமாக கிடைக்கும் தேனியில் இருந்தும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.
மாணவிகளும் அடிமை
கோவையை பொருத்தவரை பீளமேடு,தொண்டாமுத்தூர், குனியமுத்தூர், கோவைபுதூர் ஆகிய பகுதிகளில் மாநகரத்தில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை மாஃபியா கும்பலின் ஒரு பிரிவினர் நேரில் சந்தித்து கஞ்சா அடிப்பதால் ஞாபகம் சக்தி அபாரமாகும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம் என்று மூளைச்சலவை செய்து அவர்களை போதைக்கு அடிமையாக்குகிறது. இருமுறை கஞ்சா அடித்ததும் அந்த பழக்கத்தை விடமுடியாமல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு மயங்கி விடுகின்றனர். இதில், ஒரு பெரிய கொடுமை கஞ்சா போதைக்கு மாணவிகளும் அடிமையாக இருப்பதுதான். வெளியூர்களில் இருந்து இங்கு தங்கி படிக்கும் மாணவிகள், வாட்ச்மேன் உதவியுடன் கஞ்சா வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது.
கஞ்சாவை நுகரும் ஒருவர், அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வார். அவரின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உடம்பில் நரம்புகள் வெளியே தெரியும். பெற்றோர்களே இது போன்ற அறிகுறிகள் உங்களுடைய குழந்தைகளுக்கு தெரிந்தால் உடனடியாக அவர்களை கவுன்சிலிங் மையத்துக்கு அழைத்துச் சென்று கஞ்சா பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட நடவடிக்கை எடுங்கள்.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் அடிக்கடி ரோந்து சென்று வருகிறோம். கஞ்சா விற்பவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் கஞ்சாவை முற்றிலும் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றார்.
ஓராண்டில் 110 வழக்கு
கோவையில் கடந்தாண்டு கஞ்சா கடத்தியதாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.76 கிலோ 432 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2016 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 13 வழக்குகளும், 6.725 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகள் கோவை குனியமுத்தூர், போத்தனூர், பெரியகடைவீதி, ரேஸ்கோர்ஸ், உக்கடம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களும் அதிகளவில் கஞ்சா வழக்குகள்ப திவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் கல்லூரி மாணவர்களும் பலர் சிக்கி உள்ளனர். கோவையில் கடந்தாண்டு சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த கேரள மாணவன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தை சீரழிக்கும் இது போன்ற பிரச்சினைகளை மிகுந்த கவனத்தில் கொண்டு போலீசாரும், அரசு அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுப்பது கோவைக்கு ஆரோக்கியம் என்று பலதரப்பட்ட மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.