கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் டைமேக்ஸ்சன் டைமண்ட் செயற்கை வைரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு பெரியநாய்க்கன்பாளையம் பகுதியில் 2 தொழிற்சாலைகளும் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஒன்றும் உள்ளது.
இதில், கண்ணம்பாளையத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த தொழிற்சாலை ஊழியர்கள் இனி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் பணிபுரியுமாறு ஆலை நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டால் பணிபுரியும் அனைத்து குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், 30 முதல் 35 கிலோ மீட்டர் தூரம் அதிக பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலமையினை நிர்வாகம் உருவாக்குவதாகக் கூறி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆலை நிர்வாகத்தினரை தொழிலாளர் நல அலுவலகம் அழைத்து இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.