
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 7-வது வார்டுக்கு உட்பட்ட இடையர்பாளையம், தேவாங்க நகர் பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி புதனன்று (இன்று) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து, இடையர்பாளையத்தில் உள்ள வ.ஊ.சி வீதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாரியம் கால்வாய் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், ஜே.ஜே.நகர் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டியில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றுவதையும் ஆய்வு செய்தார்.



பின், ஜே.ஜே.நகருக்கு உட்பட்ட ரங்கம்மாள் வீதியில் மாநகராட்சி பொது கழிப்பிடத்தையும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.