மத்திய பாஜக அரசு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாயினை மாற்றவும், புதிய ரூபாயினை பெறவும் பெருத்த சிரமத்தினை அன்றாடமும் சந்தித்து வருகின்றனர்.
வங்கிகளிலும், ஏடிஎம் மையங்ளிலும் போதிய பணம் இல்லாததால் பல ஏடிஎம் மையங்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. ஒரு சில ஏடிஎம் மட்டும் திறக்கப்பட்டிருந்தாலும் அதில் நூற்றுக்கணக்கான மக்கள் அலைமோதி வருகின்றனர்.
பொதுமக்கள், தங்களது அன்றாட செலவுகளுக்குக் கூட வழியில்லாமல், அலுவலகம் உள்ளிட்ட தங்களது பணிக்குச் செல்லாமல் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் காத்துக்கிடக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்கிழமை என அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் பணமின்றி மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, இன்று வங்கி மற்றும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் ஏடிஎம் மையத்தில் குவிந்தனர்.


அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலக வங்கியில் ஏராளமான மக்கள் காலை முதலே குவியத்துவங்கினர். வங்கி அலுவலகத்தின் உள்ளே ஏற்பட்ட கூட்டநெரிசலைத் தொடர்ந்து மக்கள் வரிசையாக அந்த வங்கியில் இருந்து சாலை வரையில் நின்று பணப்பரிவர்த்தனை செய்தனர்.