மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம், கோவை சிட்கோ தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்துடன் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான உற்பத்தியாளர் அபிவிருத்தி மற்றும் கண்காட்சி டிசம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பீளமேடு ஸ்ரீ பத்மாவதியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன் துவக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், மத்திய அரசின் காயர் போர்டு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தொழில் வளர்ச்சியில் நாம் வெற்றி பெறுவதற்கு சர்வதேச அளவில் தொழில் வளர்ச்சியை கொண்டு செல்ல வேண்டும். இந்தியா தொழில் வளர்ச்சியில் அதிக விருதுகளை பெற்றுள்ளது. அதில், எம்.எஸ்.எம்.இ மூலம் தமிழ்நாடு ஒன்பது விருதுகள் பெற்றுள்ளது. அதிலும் கோவை மாவட்டம் ஐந்து விருதுகள் பெற்று சிறந்து விளங்குகிறது.
மேலும், ஏற்றுமதியில் சென்ற ஆண்டு ரூ.1,650 கோடி இருந்தது, இந்த வருடம் ரூ.2000 கோடியை எட்டியுள்ளது. மத்திய அரசு குறு, சிறு தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக நவீனமயமாக்குதலில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில், கோவை மற்றும் அதன் சுற்றுப்புறமுள்ள 80-க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் தங்களின் உற்பத்தித்திறனையும், தங்களிடம் உள்ள இயந்திர வசதிகளையும் பட்டியலிடுவதுடன் தங்களின் உற்பத்தித்திறனையும் வெளிப்படுத்த உள்ளனர்.
மேலும் தொழில்நுட்ப வசதிகள் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த காலகட்டத்தில் நவீன தொழில் நுட்பங்களை உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்திட கோவையைச் சார்ந்த பல தொழில் கல்வி நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கிறது.

இதில், கொடிசியா தலைவர் சுந்தரம், கொசிமா தலைவர் லோகநாதன், துணை தலைவர் சுருளிவேல், தெற்கு ரயில்வே தலைமை பட்டறை மேலாளர் பாஸ்கரன், எம்.எஸ்.எம்.இ கூடுதல் தொழில்துறை ஆலோசகர் சண்முகநாதன், மத்திய மாநில அரசு அதிகாரிகள், தொழில் முனைவோர் மற்றும் கல்வி நிறுவனங்களை சர்ந்தோரும் கலந்து கொண்டனர்.