வர்தா என்னும் புயல் கடந்த திங்களன்று சென்னை மாநகரத்தை மையமாகக் கொண்டு பலத்த காற்றுடன் வீசியது. இதில் மணிக்கு 130 முதல் 190 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றுடன் மழையும் வீசியதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இதனால், சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை தற்போது முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.
இந்நிலையில், தற்போது, வர்தா புயலைப் போலவே பலத்த காற்றுடன் நீலகிரியிலும் மழை பெய்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கிப்போனது.

நீலகிரி செல்லும் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே மரப்பாலம் பகுதியில் பழமையான மரம் ஒன்று வேருடன் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
மேலும், மரம் விழுந்ததைத்தொடர்ந்து, மண் சரிவும் ஏற்பட்டதால் சாலையில் பாறைகளும் விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் காயமின்றி உயிர்தப்பினர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மீட்புப்படையினர் விரைந்து மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரடைந்துள்ளது.