பாரதியார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வித் துறை 2016-ஆம் கல்வி ஆண்டின் தென் மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையிலான மகளிர் கபடி போட்டியை நடத்துகிறது. இதில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 54 பல்கலைக கழகங்கள் பங்கேற்கவுள்ளன.

டிசம்பர் 14 முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிக்கான துவக்கவிழா புதனன்று பாரதியார் பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், பேராசிரியர் முனைவர் ஏ.கணபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி பேசியதோடு பல்வேறு பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏறறுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, இவ்விழாவில் முன்னாள் இந்திய கபடி வீரர் அர்ஜூனா விருதுபெற்ற பி.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.
உடற்கல்வித் துறை தலைவர் மற்றும் இந்த போட்டியின் அமைப்புச் செயலருமான முனைவர் கே.முருகவேல் வரவேற்றுப் பேசினார். இணை செயலாளர் முனைவர் ஜி.குமரேசன் மற்றும் முனைவர் பி.முருகேஷ்வரி ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கான மகளிர் கபடிப்போட்டிகள் பல்கலைக் கழக விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெற்று வருகிறது.